செய்திகள்
பல்லடம் அருகே கோவில் சிலைகளை திருடிய கும்பல் கைது
வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமத்தில் நீலியம்மன் கோவில் உள்ளது. இங்கு நீலியம்மன், பாலமுருகன், பால விநாயகர், கன்னிமார் சாமி, ஆகிய சிலைகள் உள்ளன. இது தவிர சாமி ஊர்வலத்திற்காக 55 கிலோ எடையுள்ள நீலியம்மன் ஐம்பொன் சிலையும் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 29.8.2018 அன்று பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், நீலியம்மன் ஐம்பொன் சிலை, வெள்ளி கிரீடம், 1/2 பவுன் தங்க தாலி ஆகியவற்றை திருடிக் கொண்டு, அங்குள்ள உண்டியலையும் உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தையும் திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் காமநாய க்கன்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு கும்பகோணம் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அவர்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில் சூலூர் புதிய பஸ் நிலையம் அருகே சிலைத் திருட்டு கும்பல் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் அங்கு சென்று கும்பலை மடக்கினர்.
விசாரணையில் அவர்கள் கோவை மாவ ட்டம் சூலூர் தாலுகா அப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகேஷ்(வயது 55), அதே பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி(25), மற்றும் முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த வடிவேல்(35) என்பதும் அவர்கள் நீலியம்மன் கோவிலில் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று 3பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ஐம்பொன் சிலை, வெள்ளி கிரீடம், அரை பவுன் தாலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.