செய்திகள்
இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கு வங்காளத்தில் இரண்டு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் காலவரையின்றி ஒத்திவைப்பு

Published On 2021-05-03 15:56 GMT   |   Update On 2021-05-03 15:56 GMT
வேட்பாளர்கள் மரணம் அடைந்ததால், நிறுத்தப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது தேர்தல் கமிஷன்.
மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆனால் ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்ட புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரதிப் நந்தி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

சாம்செர்கஞ்ச் தொதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரெஜாயுல் ஹக்கும் கொரோனா தொற்றால் உயிரழந்தார். இதனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

292 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது.

அந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை உயர்நீமன்றம் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம். அதன்மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கடுமையாக விமர்சித்திருந்தது. இதை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றின் தாக்கம் முடிந்த பிறகு, தேர்தலை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனால் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை காலவரையின்றி ஒத்துவைத்துள்ளது.
Tags:    

Similar News