உள்ளூர் செய்திகள்
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
சிகிச்சை பலனின்றி இறந்த குட்டியை தேடி தாய் சிறுத்தை ஊருக்கு வரும் என்பதால் கிராமமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாளவாடி:
சிகிச்சை பலனின்றி இறந்த குட்டியை தேடி தாய் சிறுத்தை ஊருக்கு வரும் என்பதால் கிராமமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் அருகே உள்ள பங்களா தொட்டி என்ற கிராமத்தில் கார்த்திக் என்பவர் வீட்டின் பின்னால் மாட்டுக் கொட்டகை அமைத்து கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் கொட்டகைக்கு சென்றபோது ஒரு சிறுத்தை குட்டி படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் குட்டி சிறுத்தையை பார்வையிட்டனர்.
பிறந்த 3 மாதமே ஆன பெண் சிறுத்தை குட்டி என்பதும், அது சோர்வுடன் இருப்பதையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். தாய் சிறுத்தை அந்த சிறுத்தை குட்டியை மாட்டுக்கொட்டகையில் விட்டு சென்றது தெரிந்தது.
இதையடுத்து அந்த சிறுத்தை குட்டியை ஆசனூர் வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவரால் சிறுத்தை குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுத்தை குட்டி பரிதாபமாக இறந்தது.
இதையடுத்து சிறுத்தை குட்டி உடலை வனத்துறையினர் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் தாய் சிறுத்தை தனது குட்டியை தேடி மீண்டும் பங்களா தொட்டி கிராமத்துக்குள் வரும் என்பதால் கார்த்திக் மற்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் தாய் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.