செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் டாக்டர்கள் உள்பட 159 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 7,140 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்பட 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,140 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்:
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 6,981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 26 மற்றும் 30 வயதுடைய டாக்டர்கள், மோகனூர் அரசு பள்ளி ஆசிரியர், சவுதாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர், வசந்தபுரம் அரசு பள்ளி ஆசிரியர், அரசு பஸ் டிரைவர், பரமத்தி கிராம உதவியாளர் உள்பட 159 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்திவேலூர் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,140 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 154 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 5,969 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 87 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 1,084 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.