செய்திகள்
மோட்டார் மூலம் கிணற்று நீரை வெளியேற்றும் காட்சி.

போளூர் அருகே கடன் சுமையால் தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2021-07-26 15:00 GMT   |   Update On 2021-07-26 15:00 GMT
போளூர் அருகே கடன் சுமையால் தாய், மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தந்தையின் கதி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடதி வருகின்றனர்.
போளூர்:

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தராஜ் (வயது 53). ஆங்கில மருந்து, மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, மருந்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். இவரது மனைவி மீரா (45). மகன் தேவகுமார் (23). இவர் திருவண்ணாமலையில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வந்தார்.

இவர்களின் குலதெய்வமான பட்டணம் காத்த அம்மன் கோவில், போளூரை அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தில் உள்ளது. நேற்று காலை சாந்தராஜ், தனது மனைவி மற்றும் மகனுடன் குலதெய்வ கோவிலுக்கு வந்துள்ளார்.

கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு சற்று தூரம் நடந்து சென்று உள்ளனர். அந்த பகுதியில் அண்ணாமலை என்பவரின் விவசாய கிணற்றில் 3 பேரும் திடீரென குதித்து விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர்.

3 பேரும் விழுந்த கிணறு 45 அடி ஆழம் கொண்டதாகும்.் தீயணைப்பு படையினர் கிணற்றிலிருந்து மீரா, அவரது மகன் தேவகுமார் ஆகியோரது உடல்களை மீட்டனர். சாந்தராஜ் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

கிணற்று அருகில் ஒரு காகிதம் கிடந்தது. அதில் கடன் சுமையால் நாங்கள் மூவரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று சாந்தராஜ் குறிப்பிட்டுள்ளார்.

தாய்-மகன் பிணமாக மீட்கப்பட்ட நிலையில் சாந்தராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கிணற்றில் மூழ்கியிருக்கலாம் என கருதி கிணற்றில் உள்ள தண்ணீரை 3 மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

மீரா, தேவகுமார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர்கள் சங்கர், தரணி, செல்வராஜ், பாஷ்யம், ஆனந்தன் ஆகியோர் சாந்தராஜ் என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் சுமையால் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News