செய்திகள்
எச்.ராஜா

புதிய கல்விக்கொள்கையை குறை கூறுவதா?- நடிகர் சூர்யாவுக்கு எச்.ராஜா கண்டனம்

Published On 2019-07-15 12:56 GMT   |   Update On 2019-07-15 12:56 GMT
புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்று எச் ராஜா கூறியுள்ளார்.

உசிலம்பட்டி:

உசிலம்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வந்துள்ளேன். அவர் இருந்த போது தி.க. காரர்கள் கறுப்பு சட்டை மட்டுமல்ல, சட்டையில் கறுப்பு பட்டன் கூட வைக்க தைரியமில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எல்லா கட்டையும் உளுத்துப்போச்சு. நீட், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என கொண்டு வந்தது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஏதோ தமிழ் மொழிக்கு ஆபத்து என்பது போல் இந்தி திணிக்கப்படுகிறது. தமிழ்மொழிக்கு ஆபத்து என ஸ்டாலின் பேசுகிறார்.

நான் 45 பள்ளிகளை பட்டியலிட்டேன். தி.மு.க. வினர் நடத்தும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இந்தி, சமஸ் கிருதம் சொல்லி தரப்படுகிறது.

இந்த பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினால் 50 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். நீங்கள் தமிழ் விரோதிகள்.

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும்.

இப்போது விரைவு நீதிமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளின் வழக்கு விசாரிக்கப்படுகிறது. அந்த தொகுதிகளில் நிச்சயமாக எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

25 முறை முன்ஜாமீன் வாங்கிய ப.சிதம்பரம் மத்திய அரசின் பட்ஜெட்டை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு தமிழ் பெயரைச் சொல்லி தமிழர்களுக்கும் இந்துக்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வரும் தி.மு.க., தி.க. உள்ளிட்ட கட்சிகளை வேரோடு அழித்தால் தான் தமிழ்நாடு வளம் பெறும்.


புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. புதிய கல்வி கொள்கைக்கான வரையறை 400 பக்கம் உள்ளது. இதில் 4 பக்கத்தை முதலில் அவர் படிக்க வேண்டும். அப்புறம் கருத்து தெரிவிக்கட்டும். தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் விருப்பமொழி என்றுதான் உள்ளது. இதில் எங்கு இந்தி திணிக்கப்படுகிறது.

கனிமொழி இந்தி படிக்கும்போது ஏழை கருப்பன், சுப்பன் மகன் இந்தி படிக்க கூடாதா? இந்தி படிக்க கூடாது என கூறும் தி.மு.க.வினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் எதிர்ப்பதற்கு காரணம் ஏழைகளுக்கு நலன் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News