செய்திகள்
வேட்டி கட்டியதால் மோடி தமிழர் ஆகமாட்டார்- திருநாவுக்கரசர் பேட்டி
பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேட்டி - சட்டை அணிந்து வலம் வந்ததால் தமிழராகிவிட முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை:
பிரதமர் மோடி வேட்டி கட்டியது பற்றி திருநாவுக் கரசர் எம்.பி. கூறியதாவது:-
பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேட்டி - சட்டை அணிந்து வலம் வந்ததால் தமிழராகிவிட முடியாது. இதனால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன லாபம்? குப்பை பொறுக்கியதால் என்ன லாபம்? அவர் தங்கி இருந்த ஓட்டல் 5 நட்சத்திர ஓட்டல். அது வெளிநாட்டவர்கள் தங்கும் ஓட்டல். எப்போதும் அந்த கடற்கரை சுத்தமாகவே இருக்கும்.
அதில் குப்பை பொறுக்குவது என்பது மலிவான விளம்பரம் மூலம் மக்களை திசை திருப்பும் முயற்சியே ஆகும். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை திசை திருப்பத்தான் முயற்சிக்கிறார். ஆனால் அது தமிழ்நாட்டில் எடுபடாது. இதனால் வேலை வாய்ப்போ, தொழில் வளமோ கிடைக்குமா?
இந்திய பிரதமரும்- சீன அதிபரும் சந்தித்தது நல்லதுதான். ஆனால், சீன பட்டாசு உள்பட பல பொருட்கள் மலிவான விலையில் இறக்குமதியாகின்றன. அந்த பொருட்கள் தரமானவையும் அல்ல. இந்தியாவை வணிக சந்தை இடமாக இந்த சந்திப்பின் மூலம் ஆக்கிவிடாமல் முதலீடு, தொழில், வேலை வாய்ப்பு கிடைக்கிற வகையில் பயனுள்ள ஒப்பந்தங்கள் ஏற்பட்டால் நிச்சயமாக வரவேற்கலாம். இல்லையென்றால் பல கோடி செலவில் நடத்தப்பட்ட 2 நாள் பயணில்லா திருவிழாவாகவே கருதப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.