செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பல்லடம்:
மதுரையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 29). இவர் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியில் குடியிருந்து கொண்டு அண்ணாநகரில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் சென்றுள்ளார் அங்கு வேலை செய்யும் இடத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு வேன் ஓட்ட சென்றார், பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை.
இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார், பின்னர் இவரும் இவரது நண்பரும் அருகில் உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டு பார்த்தபோது, இவரது மோட்டார்சைக்கிளை மூன்று பேர் எடுத்துக் கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து விசாரித்தபோது, பக்கத்து வீட்டில் கட்டிட வேலைக்காக வந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் வசித்த செட்டிபாளையம் ரோடு பகுதியில் விசாரிக்கச் சென்றபோது இவரது மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு எதிரே இருவர் வந்துள்ளனர், உடனே வேல்முருகன் அவர்களை பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தார், போலீசார் விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கூடலிங்கம் (35), அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்காளை (37), காலைபாண்டி (29), என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.