செய்திகள்
தடுப்பூசி

தமிழகத்திற்கு 12ஆம் தேதிக்குள் 15.86 லட்சம் தடுப்பூசிகள் -மத்திய அரசு உறுதி

Published On 2021-07-09 12:41 GMT   |   Update On 2021-07-09 12:43 GMT
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைத்து, கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி வலியுறுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
புதுடெல்லி:

தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் மத்திய மந்திரி சபை மாற்றத்தால் அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு  தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிப்பது, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது, கருப்பு பூஞ்சை மருந்தைக் கூடுதலாக பெறுவது உள்ளிட்டவை பற்றி வலியுறுத்தினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைத்து, கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி வலியுறுத்தப்பட்டதாகவும், 12ஆம் தேதிக்குள் 15.86 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாகவும் கூறினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுப்படுத்துவது மற்றும் தமிழகத்திற்கான கொரோனா நிதியை அதிகரிப்பது குறித்து வலியுறுத்தியதாகவும், புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும்படி கேட்டதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
Tags:    

Similar News