செய்திகள்
விபத்தில் பலியான விஜய்.

ஆம்பூரில் கார் விபத்தில் வாலிபர் பலி

Published On 2019-09-03 04:46 GMT   |   Update On 2019-09-03 04:46 GMT
ஆம்பூர் அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் விஜய் (வயது 27). இவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தார்.

இவரும் இவரது நண்பர்களான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முத்தாரகுப்பம் பகுதியை சேர்ந்த பூஜித் (26), கோபி (21), வெங்கடபிரசாத் (25), சத்தியகுமார் (25), சுரேஷ் (22), சந்திரமவுலி (27) ஆகிய 7 பேர் பெங்களூரில் வேலைக்கு செல்வதற்காக நேற்றிரவு காரில் புறப்பட்டு சென்றனர். காரை விஜய் ஓட்டினார்.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் மணல் ஏற்றி சென்ற மாட்டு வண்டி மீது மோதியது. இதில் காரில் சென்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த சேலூரை சேர்ந்தவர் தமிழரசன் (32). இவர் தனது குடும்பத்தினர் சந்திரகுமார், அபர்ணா, மகேஸ்வரி, மணி ஆகிய 5 பேருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

நேற்று சாமி தரிசனம் முடித்து காரில் சொந்த ஊருக்கு திரும்பினர். இன்று அதிகாலை 3 மணிக்கு இவர்கள் வந்த கார் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை தடுப்பில் மோதி விபத்துகுள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்பூர், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News