உள்ளூர் செய்திகள்
பலி

புதுவை அருகே தொண்டையில் முட்டை தோசை சிக்கி தொழிலாளி மூச்சுதிணறி பலி

Published On 2022-01-13 07:09 GMT   |   Update On 2022-01-13 07:09 GMT
நெட்டப்பாக்கம் அருகே தொண்டையில் முட்டை தோசை சிக்கி தொழிலாளி மூச்சு திணறி இறந்து போனார்.
புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே மடுகரை எஸ்.பி.ஆர்.நகர் அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது53). தொழிலாளி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக முருகன் நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை முருகன் தனது மனைவியிடம் உணவு தயாரித்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி சித்ரா முட்டை தோசை தயார் செய்து கணவருக்கு கொடுத்தார். முருகன் அதனை சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென முட்டை தோசை தொண்டையில் சிக்கி முருகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு காரில் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முட்டை தோசை தொண்டையில் சிக்கி தொழிலாளி மூச்சு திணறி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News