இந்தியா
பிரதமர் மோடி

ஜாவத் புயல் எதிரொலி - பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம்

Published On 2021-12-02 17:59 GMT   |   Update On 2021-12-02 17:59 GMT
ஜாவத் புயலை முன்னிட்டு மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்து கொள்ளுங்கள் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுடெல்லி:

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும்.

ஜாவத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புயல் சார்ந்த சூழலைப் பற்றி ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூட்டம் நடந்தது. இதில், பிரதமருக்கான முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் பொறுப்பு படையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் இந்திய வானிலை ஆய்வுமைய இயக்குனர் ஜெனரல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், ஜாவத் புயலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். மின்சாரம், தொலைதொடர்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் உறுதி செய்து கொள்ளுங்கள் என அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News