குன்றத்தூரில் குடிபோதையில் நண்பரை அடித்து கொன்ற வாலிபர்
பூந்தமல்லி:
குன்றத்தூர், மேத்தா நகரை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது33). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி, ஒண்டி கலானியை சேர்ந்த நண்பரான கண்ணன் என்பவருடன் நேற்று இரவு வெளியே சென்றார்.
பின்னர் அவர்கள், குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியில் உள்ள காலி மைதானத்தில் மது குடித்தனர்.
அப்போது மதுபோதையில் நண்பர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த கல்லால் தியாராஜனின் தலையில் சரமாரியாக குத்தினார். மேலும் கீழே விழுந்த அவரது கழுத்தைகாலால் மிதித்து நெரித்தார்.
அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். உடனே கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்குபோராடிய தியாகராஜனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி தியாகராஜன் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் குன்றத்தூரில் பதுங்கி இருந்த கண்ணனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் மற்றும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.