செய்திகள்
புதுவையில் விடிய விடிய மழை- ஒரே நாளில் 3.7 செ.மீ. பதிவு
புதுவையில் நேற்று இரவு பெய்த மழை இன்று அதிகாலை வரை பெய்த வண்ணம் இருந்தது. ஒரே நாளில் 3.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்கியது. வழக்கமாக அக்டோபர் மாத இறுதியில் தொடங்க வேண்டிய மழை 2 வாரம் முன்னதாக தொடங்கியது. ஆனால், பெரியளவில் மழை பெய்யவில்லை. பருவமழை தொடங்கியபோது ஓரிரு நாள் கனமழை பெய்தது. அதன்பின்னர் கோடை காலம் போல வெயில் அடிக்க தொடங்கியது. அவ்வப்போது இரவு வேளைகளில் லேசான மழை பெய்தது. கடந்த வாரத்தில் ஒரு நாள் கனமழை பெய்தது. அதன்பின் வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டும் மழை பெய்யவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு மழை பெய்ய தொடங்கியது. அவ்வப்போது விட்டு, விட்டு விடிய, விடிய அதிகாலை வரை மழை பெய்த வண்ணம் இருந்தது. ஒரே நாளில் 3.7 செ.மீ. மழை பதிவாகியது. இன்று காலையில் மழை பெய்யவில்லை.