உள்ளூர் செய்திகள்
கல்வெட்டு

பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published On 2022-05-04 10:44 GMT   |   Update On 2022-05-04 10:44 GMT
திருமங்கலம் அருகே பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
திருமங்கலம் 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் 1200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கிரந்தம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

உச்சப்பட்டியை சேர்ந்த சூரியபிரகாஷ் கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும்,  பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி  குழுவினர் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர். 

அப்போது உச்சப்பட்டியில் சூலாயுதம் பொறிக்கப்பட்டு கிரந்த எழுத்துகளுடன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்த கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தபோது அது 9-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பது தெரியவந்தது.  இதுகுறித்து உதவிப்பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

பாண்டியர் ஆட்சி காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் தினசரி வழிபாடு செய்வதற்கு, நந்த தீபம் ஏற்றுவதற்கு, சமய சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கு, கோவில் பராமரிப்பு களுக்கும், மன்னர் பல ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் மீது வரியை நீக்கி  கோவில்களுக்கு  (இறையிலி) தானமாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் கோவில் பராமரிக்கப்பட்டது. இவற்றை தேவதானம் என்று அழைக்கப்படுவர். தேவதானம் வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் 4 மூலைகளில் எல்லைக்கல் நட்டு வைப்பது வழக்கம்.

குறிப்பாக சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலதானம் (திரிசூல குறியீடு) திருநாமத்துக்காணி என்றும்,  பெருமாள் கோவிலுக்கு வழங்கும் நில தானம் (சங்கு, சக்கரம் குறியீடு) திருவிடை யாட்டம் என்றும், சமண கோவிலுக்கு  வழங்கும் நில தானம் (முக்குடை குறியீடு) பள்ளி சந்தம் என அழைக்கப்படும்.

உச்சப்பட்டியில் மருத காளியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்ட தனித்தூண் கல்லில் 5 அடி நீளம் 1 ½ அடி அகலம் 3 வரி கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்தன. கல்தூணின்  கீழ் பகுதியில் சிவன் கோவிலுக்கு நில தானம் வழங்கியதற்காக திரிசூலம் கோட்டுருவம் செதுக்கப்பட்டுள்ளது. 

இக்கல்வெட்டின் எழுத்துக்கள் அதிக தேய்மானம் ஏற்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் சாந்தலிங்கம் உதவியுடன் படிக்கப்பட்டது. இக்கல்வெட்டில்  அவனி , ஸ்ரீமாறன் , மடை , தம்மம், அவந்தி,  வேந்தன் என தொடர்ச்சியற்ற வார்த்தைகள்  பொறிக்கப்பட்டுள்ளன.   

இக்கல்வெட்டு ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் ஆட்சி காலம் பொறிக்கப்பட்டு இருக்கலாம் என்றும்,  கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் 9-ம் நூற்றாண்டை   சேர்ந்தவையாகும்.சமீபத்தில் இப்பகுதியில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் சிற்பம், விஜயநகர சின்னம் வராகன் கோட்டுருவம் கண்டறியப்பட்டது மற்றொரு சிறப்பு என்றார்.
Tags:    

Similar News