தனுஷ்கோடியில் மீனவர் வலையில் சிக்கிய துப்பாக்கி தோட்டாக்கள்- கியூ பிரிவு போலீசார் விசாரணை
ராமேசுவரம்:
ராமேசுவரத்தை அடுத்து உள்ள தனுஷ்கோடி கடலில் நாட்டு படகு மீனவர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மீனவரின் வலையில் வெள்ளை நிறத்தில் மர்ம டப்பா சிக்கியது. அதனை எடுத்த மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து திறந்து பார்த்தனர்.
அதில், 7 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடம் வந்து கியூ பிரிபு போலீசார் மீனவர்களிடம் இருந்த 7 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
அதனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்த போது 5.6 எம்.எம்.கொண்ட 4 தோட்டாக்களும், 9 எம்.எம். கொண்ட 2 தோட்டாக்களும், ஒரு டம்மி தோட்டாவும் இருந்தது தெரியவந்தது.
இதனை கடலில் வீசி சென்றது யார்? சதி திட்டம் தீட்டுவதற்காக மர்ம நபர்கள் இதனை கொண்டு வந்தனரா? என்ற கோணத்தில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தோட்டாக்களை கண்டெடுத்த மீனவரிடம் விசாரணை நடந்து வருகிறது.