செய்திகள்
கொலை

சங்கரன்கோவில் அருகே விவசாயி அடித்துக்கொலை

Published On 2021-09-14 11:09 GMT   |   Update On 2021-09-14 11:09 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று காலை விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக டிரைவர் போலீசில் சரண் அடைந்துள்ளார்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகையா (வயது 60), விவசாயி.

இவருக்கு மருதாத்தாள் என்ற மனைவியும், மனோகரன், சுதாகரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் பெரியதுரை (43). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை ஆயாள்பட்டி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சண்முகையா சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற பெரியதுரை, சண்முகையாவை தனது மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் சிறிது நேரத்தில் பனவடலிசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பெரியதுரை கட்டையால் சண்முகையாவை அடித்து கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார்.

உடனே சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த சண்முகையாவின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பெரியதுரையிடம் கேட்டனர். அதற்கு இடப்பிரச்சனை காரணமாக கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் உண்மை காரணம் அதுதானா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News