கதம்பம்
சித்தர்

சித்தர்கள் கண்ட பரிணாமம்...

Published On 2022-01-20 10:57 GMT   |   Update On 2022-01-20 10:57 GMT
இனி அடுத்த கட்டப் பரிணாமம் எப்படி இருக்கும்? தெரியாது என்று ஒரே வார்த்தையில் டார்வின் சொல்லி விட்டார். ஆனால் சித்தர்கள் அந்த பரிணாமத்தை அடைந்துள்ளார்கள்.
சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கை என்று கூறுவது உயிரிகளின் உடல்களில் உள்ள உறுப்புகள் எவ்வாறு படிப்படியாக முன்னேறி புதிய புதிய உறுப்புகள் தோன்றின என்ற வரலாறு. சுருக்கமாகச் சொன்னால் ‘உறுப்புகளின் பரிணாமம்’.

தொல்காப்பியனும், திருவள்ளுவரும் கூற வந்தது அறிவுநிலைப் பரிணாமம். இதன் மறுதலையே சித்தர்கள் கூறும் ‘வாசிப் பரிணாமம்’.
 
அதாவது ஒவ்வோர் அறிவு நிலைக்கும் ஏற்ப ஒவ்வொரு விதமான காற்றும், அதை உட்கிரகித்து அதற்கு உள்ளிருக்கும் பிராண சக்தியை உயிருக்கு ஊட்டும் தனித்தனி விதமான சுவாச உறுப்புகளும் உண்டு. அவை பரிணாம வரலாற்றில் தேவைக்கேற்பத் தோன்றும். இது ஓர் உண்மை.

மற்றோர் உண்மை பிராண வாயு என்ற ஆக்ஸிஜன் வேறு, பிராண சக்தி வேறு. இந்த இடத்திற்கு நவீன அறிவியல் இன்னும் வரவில்லை. 

ஒவ்வோர் உயிரியின் அறிவு நிலைக்கேற்பவே அதன் சுவாச முறை அமையும் என்பதே சித்தர்கள் கண்ட பரிணாமக் கொள்கை. உயிர் வாழ்வதும், நிலைப்பதும் ‘சித் பிராணன்’ என்ற பிரபஞ்ச ஆற்றலால். இது பிரபஞ்சத்தில் இல்லாத இடமில்லை. ஒவ்வோர் அணுவையும் உள்ளிருந்து இயக்குவது இந்த ஆற்றல்தான். இதை நேரடியாக எடுத்துக்கொள்ள உயிரிகளுக்குத் தெரியவில்லை. எடுத்துக்கொள்ளத் தெரிந்து கொள்பவனுக்குப் புறத்திலுள்ள காற்று என்ற ஊடகம் தேவையில்லை. அப்போது அவன் சித்தன் ஆகிறான். அந்நிலையே பரிணாமத்தின் இலக்கு. அதை நோக்கியே கடந்த 40 கோடி ஆண்டுகளாக உயிரிகள் பயணம் செய்கின்றன. 

தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன. மற்ற பிராணிகள், மனிதன் உட்பட ஆக்ஸிஜனை உட்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. ஆனால் சில வித்தியாசங்களுடன் என்ன அந்தப் படிநிலைகள்? மீன் செதில்கள் மூலமாகத் தண்ணீரை உட்கொள்கிறது. பிறகு தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து, அதற்குள் இருக்கின்ற பிராண சக்தியைப் பிரித்தெடுத்து உட்கொண்டு உயிர் வாழ்கிறது. அதற்கான சுவாச அமைப்பு முறை அதன் உடலில் உண்டு. மீனை அதன் ஊடகமான தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து நிலத்தில் போட்டால், நிலத்தில் வீசும் காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்து எடுத்துக் கொள்ள முடியாமல் உடனே இறந்து விடும். மீன் ‘சித் பிராண சக்தி’யிலிருந்து 2 படி நிலைகள் விலகி இருக்கிறது.

பரிணாமத்தில் அடுத்து வருவன தவளை, முதலை போன்ற உயிரிகள். இவை நீர், நிலம் என்ற இரண்டு ஊடகங்களிலும் வாழக் கற்றுக் கொண்டவை. இவற்றை ‘இரு ஊடக உயிரிகள்’ என்பர். 

இவை முதலில் நீரிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்து அதிலிருந்து பிராண சக்தியை, பிரித்து உட்கொள்ளும். நிலத்திற்கு வந்தால் நேரடியாகக் காற்றை உட்கொண்டு அதிலிருந்து பிராணனைப் பிரித்து எடுத்துக் கொள்ளக் கற்றவை. இரண்டு விதமான சுவாச முறைகளுக்கும் ஏற்ப இவற்றின் சுவாச உறுப்புகள் அமைந்துள்ளன.

அடுத்து மனிதன் வருகிறான். நிலத்தில் உள்ள காற்றிலிருந்து மட்டும் ஆக்ஸிஜனைப் பிரித்து, அதிலுள்ள பிராண சக்தியை உட்கொள்கிறான். நீரில் இவனால் சுவாசிக்க இயலாது. இதுவரை பரிணாமம் வந்திருக்கிறது.

இனி அடுத்த கட்டப் பரிணாமம் எப்படி இருக்கும்? தெரியாது என்று ஒரே வார்த்தையில் டார்வின் சொல்லி விட்டார். ஆனால் சித்தர்கள் அந்த பரிணாமத்தை அடைந்துள்ளார்கள்.

மீனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஓர் இடை உயிரி தோன்றியது. அதன் பெயர் ‘இரட்டை ஊடக உயிரி’ என்று கண்டோம். அதேபோல் மனிதனுக்கும், சித்திநிலை அடைந்த சித்தனுக்கும் இடையில் ஓர் ‘இரட்டை ஊடகஉயிரி’ என்பவன் தான் ‘வாசியோகி’. ஒரே நேரத்தில் காற்றை சுவாசித்து வாழவும், காற்றை நீக்கி, நேரடியாக ‘சித் பிராணணை’ச் சுவாசித்து வாழவும் பயிற்சி செய்து வெற்றி கண்டவர்கள்.

பயிற்சி நிறைவுற்று, காற்று தேவையில்லை, எப்போதும் ‘சித்கலை’யே போதும் என்ற நிலையை அடைந்தவன் சித்தன். அவன் பிரபஞ்சத்தில் எங்கும் வாழலாம். இச்சுவாசம் ‘கதி’ எனப்படும். இதை ஒளிச்சுவாசம் என்பர் சித்தர்கள். இதுவே சித்தர்களின் பரிணாமக் கொள்கை.

-சேலம் குப்புசாமி
Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்