செய்திகள்
தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிவதால் கொரோனா பரவும் அபாயம்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் குவிந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் சனி, ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் குவிவார்கள். கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சனி, ஞாயிற்றுக்கிழமை மீன்மார்க்கெட் மூடப்பட்டது.
தற்போது தளர்வு காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் குவிந்தனர். இருப்பினும் புரட்டாசி மாதம் என்பதால் மற்ற வாரங்களை காட்டிலும் இன்று பொதுமக்கள் வருகை சற்று குறைவாக காணப்பட்டது.
மீன்கள் விலையும் குறைந்திருந்தது. ஆனாலும் அசைவ பிரியர்கள் மற்றும் வியாபாரிகள் மீன்கள் வாங்க மார்க்கெட்டிற்கு திரண்டு வந்திருந்தனர்.
சமூக இடைவெளியை பின்பற்றாமல் அருகருகே நின்று தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர். இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.