செய்திகள்
பவ்யா - சரஸ்வதி - ராதா

நீச்சல் பழகியபோது குளத்தில் மூழ்கி 3 பேர் பலி

Published On 2021-01-25 01:57 GMT   |   Update On 2021-01-25 01:57 GMT
திண்டுக்கல் அருகே நீச்சல் பழகியபோது குளத்தில் மூழ்கி சிறுமிகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரிசெட்டியப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மனைவி ராதா (வயது 38). இவர், திண்டுக்கல் அபிராமி கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் ராதா தனது மகள் பவ்யா (13) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (13) ஆகியோருடன் நேற்று அப்பகுதியில் உள்ள செங்குளத்துக்கு குளிக்க சென்றார்.

சிறுமிகள் இருவரும் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ராதா நீச்சல் கற்று கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ராதா ஈடுபட்டார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கி விட்டார்.

குளத்தில் மூழ்கிய 3 பேரும் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை அறிந்த கிராம மக்கள் குளத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ½ மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். அதாவது தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.

Tags:    

Similar News