செய்திகள்
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம்- வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி அருகே ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. பின்னர் இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்து (வயது 27) என்பவர் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பெங்களூரில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து முத்துவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.