ஆட்டோமொபைல்
ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கூட்டர்: யமஹா திட்டம்?
2018 ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா நிறுவனம் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் புதிய 125சிசி ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யமஹா சார்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், யமஹா நொஸா கிரான்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யமஹா நொஸா கிரான்ட் ஸ்கூட்டர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்கூட்டர் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருந்தது. புதிய 125சிசி ஸ்கூட்டர் யமஹாவின் நொஸா கிரான்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நொஸா கிரான்ட் ஸ்கூட்டரில் 124சிசி, SOHC, ஃபியூயல்-இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.7 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்திய சந்தைக்கென போட்டியை ஏற்படுத்தும் வகையில் இங்கு கார்புரேடெட் இன்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் யமஹாவின் புதிய ஸ்கூட்டர் ஹோன்டா ஆக்டிவா 125, ஹோன்டா கிரேசியா, சுசுகி அக்செஸ் 125 மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.