செய்திகள்
யேலினா லட்சங்கா

அதிபருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக பெலாரசின் பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு சிறை தண்டனை

Published On 2020-09-30 23:10 GMT   |   Update On 2020-09-30 23:10 GMT
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மின்ஸ்க்:

ஐரோப்பிய நாடான பெலாரசில் 1994 ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லூகாஷென்கோவே அதிபராக பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதையடுத்து, பெலாரஸ் அதிபராக அலெக்சாண்டர் 6-வது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனால், 26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் தொடங்கியது. பின்னர் நாளடைவில் பொதுமக்களே அதிபருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர். 

லட்சக்கணக்கானோர் பங்கேற்றுவரும் இந்த போராட்டத்தை கண்ணீர் புகைகுண்டு, தடியடி நடத்தி போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும், போராட்டத்தில் பங்கேற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பெலாரஸ் அரசு இறங்கியுள்ளது.

மேலும், பெலாரஸ் நாட்டில் சினிமா, விளையாட்டு உள்பட பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் அலெக்சாண்டர் அதிபர் பதவியில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்தி புகார் மனுக்களை அனுப்பினர். 

இதில் பெலாரசின் பிரபல கூடைப்பந்து வீரங்கனையான யேலினா லட்சங்காவும் ஒருவர். மேலும், இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பெலாரஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி பிரபலமானவர். இவர் அதிபருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றார்.   

இந்நிலையில், சிகிச்சைக்காக நேற்று வெளிநாடு செல்ல முயன்றபோது யேலினா லட்சங்காவை பெலாரஸ் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யேலினா போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கூடைப்பந்து வீராங்கனை தற்போது மின்ஸ்க் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

Tags:    

Similar News