செய்திகள்
ஜிகே வாசன்

தொடர்மழையால் பயிர்கள் சேதம்: டெல்டா விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்- ஜிகே வாசன் வலியுறுத்தல்

Published On 2021-01-15 05:43 GMT   |   Update On 2021-01-15 05:43 GMT
டெல்டா விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அறுவடை செய்ய காத்திருக்கும் நெற்பயிற்கள் மழை நீரில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.

விவசாயிகள் பல்வேறு பொருளாதார இன்னல்களுக்கு இடையில் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மகசூல் காண இருக்கும் இந்த நேரத்தில் இயற்கையின் சீற்றத்தினால், மிகப் பெரிய சேதத்தை சந்தித்துள்ளனர்.

விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு உரிய இழப்பீடை மாநில அரசு துரிதமாக வழங்கிட வேண்டும்.

பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு, காப்பீடு நிறுவனங்கள் உடனடியாக காப்பீட்டுத் தொகையை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். இழப்பீடு தொகை குறித்த காலத்தில் கிடைத்தால் தான் அவர்கள் மீண்டும் கோடை சாகுபடி செய்வதற்கோ, அல்லது சம்பா, குறுவை சாகுபடியை தொடங்குவதற்கோ ஏதுவாக இருக்கும்.

விவசாயிகளுக்கு அளிக்கும் காலம் தாழ்ந்த உதவி மேலும் துயரத்தை தான் தரும். ஆகவே விவசாயிகளின் நலனில் அக்கறைக்கொண்ட அரசாக திகழும் தமிழக அரசு, உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News