செய்திகள்
மின்னல்

கயத்தாறு அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி

Published On 2021-05-10 16:43 GMT   |   Update On 2021-05-10 16:43 GMT
கயத்தாறு அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இவருக்கு முருகலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
கயத்தாறு:

கயத்தாறு தாலுகாவைச் சேர்ந்த தெற்குமயிலோடை பஞ்சாயத்தில் தலையால்நடந்தான்குளம் என்ற கிராமத்தில் ஊருக்கு கீழ்ப்புறத்தில் வேப்பங்குளம் செல்லும் சாலையில் ரோட்டோர மண்ணை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதில் கலப்பைபட்டி தெற்கு காலனியை சேர்ந்த பொன்னையா மகன் மாரிமுத்து(வயது40) உள்ளிட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த 10 கூலி தொழிலாளிகள் வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் கயத்தாறு பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளிகள் அருகில் உள்ள வீடுகளில் போய் மழைக்கு ஒதுங்கி நின்றனர். இதில் மாரிமுத்து அருகில் உள்ள ஒரு வீட்டில் கழிப்பறை வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே விழுந்து பலியானார். மேலும் மின்னல் தாக்கியதில், அந்த வீட்டின் கழிப்பறை சுவர் இடிந்து சிதறிக் கிடந்தது.

இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மாரிமுத்துவுக்கு முருகலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News