செய்திகள்
சசிகலா

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார்- அமமுக தகவல்

Published On 2019-10-06 10:35 GMT   |   Update On 2019-10-06 11:26 GMT
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் வெளியில வருவார் என்று அ.ம.மு.க. நாளேட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் வெளியில வருவார் என்று அ.ம.மு.க. நாளேட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் கூறியிருப்பதாவது:-

அம்மாவின் அடிபற்றி ஆற்றலை வெளிக்காட்டி வீரத்தையும் தீரத்தையும் வெள்ளமாய் பரப்பி மானத்தையும் மாண்பையும் மகத்துவமாய் நிரப்பி அம்மாவைப் போலவே ஆர்ப்பரிக்க... அவர் ஆசி பெற்ற சின்னம்மா நோன்பு இருந்து வருகிறார்.

எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டு மென்று எனக்குத் தெரியும். எடுத்த பிறகு எப்படி வெற்றி பெறுவது என்பது எல்லோருக்கும் புரியும்.

அதன்பிறகு அறியாதவர்களின் பித்தம் தெளியும்!! என்று கழகத்தை வழிநடத்த திலகமாக வருவார்!!

தியாக வேள்வியில் தியாகி, உலக வாழ்க்கையில் உருகும் மெழுவர்த்தியாகி ‘பழகிப்பார் பாசம் புரியும் பகைத்துப் பார் வீரம் தெரியும்!’ என்று பிரபஞ்ச ஆசியுடன் பிரகாசிக்கப் போகிறார்.

மதங்கொண்ட யானையா அவர் என்று எண்ணினால் இல்லையில்லை மலர் போன்ற மனம் கொண்டவர் என்று பழகிப் பார்த்தவருக்கு மட்டுமே தெரியும்.

சினங்கொண்ட சிங்கமா அவர் என்று எண்ணினால் இனமானப் போராளியாய் இதயத்தில் இடம்பிடிப்பார்.

சீற்றங்கொண்ட சிறுத்தையா அவர் என்று எண்ணினால் சிற்றன்னை எனும் சீதனமாய் மாற்றம் தரும் மாமனுஷியாய் மாநிலத்தில் வலம் வருவார்.

‘இதனை இதனால் இவர் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவர் கண்விடல்’ எனும் வள்ளுவத்தின் வாக்குப்படி ஆளுமையும், திறமையும் படைத்தவர் அம்மாவின் சகோதரிதான் என்பதை காலம் நிரூபிக்கும்.

வெற்றிச் செய்தி வர வெகு காலமில்லை சுற்றிச் சூழ படைகள் வர அவரின் நெற்றியில் வெற்றித் திலகம் பிரகாசிக்கும்! நீண்ட வரலாற்றில் நிலைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News