உள்ளூர் செய்திகள்
கைது

மதுரையில் வியாபாரி, பெண்ணிடம் லேப்-டாப் செல்போன் திருடியவர் கைது

Published On 2021-12-25 09:29 GMT   |   Update On 2021-12-25 09:29 GMT
மதுரையில் வியாபாரி, பெண்ணிடம் லேப்-டாப் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாநகர வணிக சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. அந்த பகுதிகளில் பிக் பாக்கெட் திருடர்கள் அட்டகாசம் அதிகரித்தது.

இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமி‌ஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமி‌ஷனர் சண்முகம் ஆலோசனை பேரில், தெற்குவாசல் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, கண்காணித்து வந்தனர். அப்போது சின்னக்கடை வீதியில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் 50 வயது மதிக்கத் தக்க நபர் லேப்-டாப்பை திருடி கொண்டு செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து ஐஸ் கிரீம் கடையின் உரிமையாளர் வில்லாபுரம் சொக்கலிங்கம் சந்து பகுதியைச் சேர்ந்த பாண்டியனிடம் போலீசார் விசாரித்தபோது அவரது லேப்-டாப் திருடுபோனது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லேப்டாப் திருடிய மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்த நபர் தெற்கு மாரட் வீதியில் நடந்து சென்றபோது போலீசார் பிடித்தனர். தொடர்ந்து விசாரணையில் அவர் தெற்கு வெளிவீதியை சேர்ந்த நாகேந்திரன் 55) எனவும், ஐஸ் கிரீம் கடையில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டார்.

போலீசிடம் பிடிபட்ட நபர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மருந்து கடையில் வேலை பார்க்கும் சுபாஷினி என்ற பெண்ணின் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News