செய்திகள்
2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த வல்லுநர் குழு பரிந்துரை
2 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை என்பது கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பைசர், ஜான்சன் - ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபாா்ம் தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கவில்லை.
இந்நிலையில் 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக 2 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை என்பது கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வந்தது.
இதன்படி சிறப்பு வல்லுநர் குழுவானது மூன்று கட்டங்களாக நடத்திய பல்வேறு பரிசோதனை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 2 வயது முதல் 18 வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த வல்லுநர் குழு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையமும் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தால் இந்தியாவில் அவசரகால அடிப்படையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும்.
இதையும் படியுங்கள்... தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அபாயம்