ஆன்மிகம்
அம்மனை தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்களின் கூட்டத்தை படத்தில் காணலாம்.

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

Published On 2020-11-18 08:55 GMT   |   Update On 2020-11-18 08:55 GMT
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்தனர். முக கவசம் அணிந்து வந்த பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட கோவில் பணியாளர்கள் அனுமதித்தனர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கினால் நோய் நொடி நீங்கும், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இதன் காரணமாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், பெரியவர்கள் என்று ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சமயபுரம் வந்திருந்தனர். அவர்களில் பலர் முடிக்காணிக்கை செலுத்தியும், கரும்புத்தொட்டிலில் குழந்தையை சுமந்து கோவிலை வலம் வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வணங்கினர்.

மேலும், கோவில் முன்புறமும், நெய் விளக்கு ஏற்றும் இடத்திலும் ஏராளமான பக்தர்கள் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவிலுக்குள் சென்று அம்மனை வணங்குவதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முக கவசம் அணிந்து வந்த பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட கோவில் பணியாளர்கள் அனுமதித்தனர்.
Tags:    

Similar News