கிறித்தவம்
வால்பாறையில் கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனி

வால்பாறையில் கிறிஸ்தவர்கள் தவக்கால பரிகார பவனி

Published On 2022-04-04 02:37 GMT   |   Update On 2022-04-04 02:37 GMT
வருகிற 10-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏசு கிறிஸ்து தாழ்மையின் அடையாளமாக தனது சீடர்களின் கால்களை கழுவியதை கடைபிடிக்கும் வகையில் வருகிற 14-ந் தேதி கால்களை கழுவும் சடங்கும் நடக்கிறது.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இந்த நாட்களை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த தவக்காலம் கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கியது. தவக்காலத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் தினமும் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தவக்காலத்தின் 5-வது ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் பரிகார பவனி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி வால்பாறையில் உள்ள தூய இருதய ஆலயத்தை சேர்ந்தவர்கள் பரிகார பவனி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அவர்கள் பங்குகுரு மரியஜோசப் தலைமையில் கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்துக்கு பவனியாக சென்றனர்.  

10 கி.மீ. தூர இந்த பவனியின்போது ஏசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதை பாடுகளை 14 இடங்களில் தியானித்து ஜெபித்து கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தை அடைந்தனர்.

பின்னர் அங்கு கூட்டு பாடல்திருப்பலி நடந்தது. தொடர்ந்து அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

தொடர்ந்து வருகிற 10-ந் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏசு கிறிஸ்து தாழ்மையின் அடையாளமாக தனது சீடர்களின் கால்களை கழுவியதை கடைபிடிக்கும் வகையில் வருகிற 14-ந் தேதி கால்களை கழுவும் சடங்கும், 15-ந் தேதி ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளான புனித வெள்ளியும், ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை 17-ந் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.
Tags:    

Similar News