உள்ளூர் செய்திகள்
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள், கோழிகள் மற்றும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர்.
இந்த சந்தையில் மொத்தம் 5 ஆயிரம் ஆடுகள், 3 ஆயிரம் கோழி மற்றும் சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.4,700 முதல் ரூ.6,200 வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9,600 முதல் ரூ.11,300 வரையும், வளர்ப்பு குட்டி ஆடுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன.
காகம், கீரி, மயில், செங்கருப்பு போன்ற பல்வேறு ரக சேவல்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு தரத்திற்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையானது. கோழிகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டன.
சந்தைக்கு 110 டன் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. ஒரு கூடை புளி ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது.
60 கிலோ எடையுள்ள சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ரூ.1,000 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் நேற்று நடந்த சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.