செய்திகள்
2 குழந்தைகளுடன் முதல் மனைவி சந்தியா.

நான் அவன் இல்லை சினிமா படப்பாணியில் 4 பெண்களை திருமணம் செய்த திருப்பூர் டெய்லர் - முதல் மனைவி பரபரப்பு புகார்

Published On 2021-10-05 10:42 GMT   |   Update On 2021-10-05 10:42 GMT
2 குழந்தைகளை பெற்ற பின்னர் என்னிடம் அழகு இல்லை எனக்கூறி என்னுடன் சிங்காரம் வாழ மறுத்து விட்டார் என சந்தியா தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா ( வயது 28). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருக்கும் திருப்பூரில் டெய்லராக பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சிங்காரம் (29) என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் சந்தியாவை சிங்காரம் தனது சொந்த ஊரான தர்மபுரிக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சந்தியா தர்மபுரியில் வசித்து வந்த நிலையில், சிங்காரம் தர்மபுரிக்கு வராமலும், பாண்டியன் நகரில் உள்ள வீட்டிற்கும் செல்லாமல் இருப்பது தெரியவந்தது. 

மேலும் வேறொரு நிறுவனத்துக்கு பணிக்கு சென்ற அவர் அங்கு பணிபுரிந்த கஸ்தூரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இந்தநிலையில் கஸ்தூரி திடீரென இறந்த நிலையில் அதே பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய மதுரை சோழவந்தானை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்துள்ளார். 

ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணமானதை மறைத்து 4-வதாக கோவையை சேர்ந்த லட்சுமி என்பவரையும் திருமணம் செய்து தனித்தனியாக வீடு பிடித்து குடி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து வீட்டுக்கு வராத சிங்காரம் குறித்து சந்தேகம் அடைந்த சந்தியா தர்மபுரியில் இருந்து திருப்பூர் பாண்டியன் நகருக்கு வந்து பார்த்த போது, அவர் அந்த வீட்டில் இல்லை. மேலும் கோவையை சேர்ந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் வசிக்கும் இடத்தை விசாரித்து அங்கு நேரில் சென்று பார்த்தபோது லட்சுமியுடன் குடும்பம் நடத்துவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கணவரிடம் தட்டி கேட்டபோது, தான் அப்படித்தான் இருப்பேன் என்றும், தான் பெண்களின் அழகை ஆராதிக்க பிறந்தவன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 3-வது மற்றும் 4-வது மனைவிகள் இருவரும் சேர்ந்து கொண்டு சந்தியாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து தொடர்ச்சியாக அபலை பெண்களை, நான் அவனில்லை பட பாணியில் ஏமாற்றி திருமணம் செய்து வரும் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சந்தியா கலெக்டரிடம்  மனு அளித்துள்ளார். 

அந்த மனுவில், கணவர் சிங்காரத்தை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையென்றால் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து சந்தியா கூறுகையில்:

2 குழந்தைகளை பெற்ற பின்னர் என்னிடம் அழகு இல்லை எனக் கூறி என்னுடன் சிங்காரம் வாழ மறுத்துவிட்டார். நான் தட்டிக்கேட்ட போது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள். நான் உன்னை கொலை செய்தால் 6 மாதங்கள்தான் சிறையில் இருப்பேன். 

அதன்பிறகு வெளியே வந்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இருப்பேன் என்று மிரட்டினார். என் வாழ்க்கை சீரழிந்தது போல் மற்ற பெண்களின் வாழ்க்கையையும்  சீரழித்து விடுவார். எனவே அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News