ஆன்மிகம்
சிவன்

தமிழ் மாத பிரதோஷ நைவேத்தியமும்... தீரும் பிரச்சனைகளும்...

Published On 2020-12-25 04:38 GMT   |   Update On 2020-12-25 04:38 GMT
மாதம் தோறும் வரும் பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய நைவேத்தியங்களையும், அதனால் தீரும் பிரச்சனைகளையும் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சித்திரை:- இந்த மாதத்தில் வருகிற பிரதோஷ நாட்களில் நீர்மோரும், தயிர் சாதமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து, நிவேதிக்கப்பட்ட நீர்மோரையும், தயிர் சாதத்தையும் விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- மூலம், பவுத்திரம், சூடு, எலும்புருக்கி போன்ற நோய்கள் நீங்கும்.

வைகாசி:- பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நம்மைவிட்டு அகன்றுவிடும்.

ஆனி:- தேனும் திணைமாவும் கொண்டு ஈசனார்க்கு நிவேதனம் செய்யப்பட வேண்டும்.
பலன்:- மலட்டுத் தன்மை நீங்கும்.

ஆடி:- வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து அதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து பின்தானம் செய்ய வேண்டும்.
பலன்:- கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

ஆவணி:- தயிரன்னம் நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- காரியத்தடைகள் நீங்கும். நோய் வாய்ப்பட்டவர் அந்நோயினின்றும் மீண்டும் சுகம் பெறுவர்.

புரட்டாசி:- சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும் நிவேதிக்கப்பட்டு தானம் புரிதல் வேண்டும்.
பலன்:- அரிப்பு, தடிப்பு, ஊரல், விஷக்கடி போன்ற தொல்லைகள் நீங்கும்.

ஐப்பசி:- உளுந்து வடையும், இனிப்புப் பண்டமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்தல் வேண்டும்.
பலன்:- சீதள நோய் விலகும்.

கார்த்திகை:- எலுமிச்சை சாதமும், தேங்காய் சாதமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்திடல் வேண்டும்.
பலன்:- பெண்களுக்குரிய கர்ப்ப சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் அடி வயிற்றில் இருந்து தொடைப் பகுதி வரையிலான நோய்கள் நீங்கும்.

மார்கழி:- வெண் பொங்கலும், கடலை சுண்டலும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்யப்பட வேண்டும்.
பலன்:- மஞ்சள்காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.

தை:- தயிர் ஏட்டில் தேன் சொரிந்து இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் அளிக்கப்பட வேண்டும்.
பலன்:- கபத்தால் வரும் வியாதிகள் நீங்கும்.

மாசி:- நெய்யுடன் கலந்து ஈசனார்க்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
பலன்:- மாந்தம், வயிறு உப்புசம், சிறுநீரகக் கோளாறு ஆகியன தீரும்.

பங்குனி:- தேங்காய்ச் சாதமும், தக்காளிச் சாதமும் பெருமானுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
பலன்:- பித்தம், பைத்தியம் முதலிய நோய்கள் நீங்கும்.
Tags:    

Similar News