செய்திகள்
மாமல்லபுரத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்கள்

பொங்கலுக்காக இயக்கப்பட்ட மினி பஸ்சுக்கு மாமல்லபுரத்தில் வரவேற்பு

Published On 2020-01-20 10:00 GMT   |   Update On 2020-01-20 10:00 GMT
மாமல்லபுரத்தில் பொங்கலுக்காக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
மாமல்லபுரம்:

பொங்கல் தொடர் விடுமுறையை கொண்டாட மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்களின் வசதிக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓடிய 50க்கும் மேற்பட்ட சென்னை மாநகர மினிபஸ்கள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.

அவை 5 நாட்களாக மாமல்லபுரம் நகருக்குள் ‘588 கட் சர்வீஸ் - சிறப்பு பேருந்து’ என்ற பெயரில் பூஞ்சேரி டோல்கேட் மற்றும் புறவழிசாலை பகுதியில் இருந்து அர்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரதம், பட்டர்பால் போன்ற புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் மற்றும் மாமல்லபுரத்தில் பஸ் நிலையம் வரை இயக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

கடந்த ஆண்டுகளில் பொங்கல் தொடர் விடுமுறையன்று குடும்பத்துடன் மாமல்லபுரம் வந்தால் குழந்தைகளுடன் வெயிலில் நடந்து செல்லும் நிலையும் ஆட்டோக்களுக்கு அதிக செலவு செய்யும் நிலையும் இருந்தது. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழக அரசு மினிபஸ் ஏற்பாடு செய்திருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. நேற்று இரவுடன் மினிபஸ் சேவை நிறுத்தப்பட்டு அவைகள் ரெகுலர் வழித்தடத்துக்கு மாமல்லபுரத்தில் இருந்து சென்னை திரும்பியது.


Tags:    

Similar News