செய்திகள்
டாக்டர்

கொரோனா பணியில் ஈடுபடும் டாக்டர்கள், நர்சுகள் உயர்தர விடுதிகளில் தங்க வசதி

Published On 2021-06-10 09:53 GMT   |   Update On 2021-06-10 09:53 GMT
கொரோனா பேரிடர் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பேரிடரில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, எழும்பூர் கண் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, அரசு புறநகர் மருத்துவமனைகள், அரசு கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை, கிண்டி கிங் வளாகத்தில் கொரோனா சிறப்பு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. அயனாவரம், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான இருப்பிட வசதியும், மூன்று வேளை தரமான உணவும் சரியாக வழங்கப்படவில்லை என்று முதல்-அமைச்சருக்கும், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு உயர்தர தங்கும் விடுதிகளில் தங்குமிட வசதியும், தரமான உணவும் வழங்கிட முதல்- அமைச்சரின் உத்தரவின் படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நடவடிக்கையின்படி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கு உயர்தர தங்கும் விடுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதில் அவர்களை தங்க வைக்க வேண்டும் என்றும், சென்னையில் உள்ள தரம் மற்றும் பிரசித்தி பெற்ற உணவகங்களில் இருந்து அவர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சாதாரண உணவகங்களில் இருந்து உணவுக்கென்று ரூ.600 முதல் ரூ.550 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந் தேதிக்கு பிறகு அடையாறு ஆனந்த பவன், நம்ம வீட்டு வசந்தபவன், சரவண பவன், சங்கீதா போன்ற உயர்தர சைவ உணவகங்களில் இருந்தும், வசந்தபவன்- குருமெஸ், நந்தனாஸ் ஆகிய அசைவ உணவகங்களில் இருந்தும் தரம் உயர்ந்த புரதசத்து மிகுந்த சைவ மற்றும் அசைவ உணவுகள் ரூ.450-க்கு சென்னையில் வழங்கப்படுகிறது. அது போல் தமிழ்நாடு முழுவதும் ரூ.375- ரூ.350 என்று மாவட்டத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


செவிலியர்கள் தங்கும் வசதி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாதாரண விடுதியில் தங்குவதற்கு ரூ.900 என விலை இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதிக்கு பிறகு விஜய் பார்க், வெஸ்டின் பார்க், சபரி இன், பிரியதர்ஷினி பார்க், சென்னை கேட்வே, அருணாச்சல ரெசிடன்சி போன்ற உயர்தர தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அதற்குரிய ஒரு நாள் தொகை ரூ.900-த்தில் இருந்து ரூ.750- என குறைக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொரோனா பேரிடரில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றிற்கு ஆகும் செலவில் இருந்து எந்தவித இடையூறும், கையூட்டும் இல்லாமல் பயனாளர்கள் முழுமையான பயனை அடையவும், அதே வேளையில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு அரசுக்கு ஏற்படும் செலவீனம் ஏறத்தாழ ரூ.30 லட்சம் தமிழ்நாடு முழுவதும் மிச்சப்படுத்தப்படுகிறது.

முதல்- அமைச்சரின் உத்தரவுப்படி, மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கையின்படி பேரிடர் காலத்தில் சேவை மனப்பான்மையுடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆரம்பக் கட்டம்தான். கொரோனா பேரிடர் முடிவுக்கு வரும் நிலையில் இது குறித்து துறை ரீதியாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News