வருகிற 18-ந் தேதி அண்ணாமலை பல்கலை கழக பட்டமளிப்பு விழா
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் 84-வது பட்டமளிப்பு விழா வருகிற 18-ந் தேதி மாலை 4 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடை பெறுகிறது.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி, தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். இந்திய வின்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.
விழாவில் துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் சீத்தாராமன், சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு சிதம்பரம் அண்ணா மலைநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.