செய்திகள்
தற்கொலை

மதுரையில் போலீஸ்காரர் தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

Published On 2021-04-04 09:54 GMT   |   Update On 2021-04-04 09:54 GMT
மதுரையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கழுங்குப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண்பாண்டியன் (வயது 25).

இவர் கடந்த 2017-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். சென்னை ஆயுதப் படையில் பணியாற்றி வந்த அருண்பாண்டியன் கடந்த சில மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் வசிக்கும் தனது சகோதரர் போலீஸ்காரர் கண்ணாயிரம் வீட்டிற்கு வந்தார்.

அங்கு நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருண்பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். ஆயுதப்படை குடியிருப்பில் போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தல்லாகுளம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

தற்கொலை செய்த அருண்பாண்டியன் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தில்தான் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி மாதம் சேலத்தில் பணியாற்றியபோது வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

அதன் பிறகு உடல்நலம் தேறிய அருண்பாண்டியன் கடந்த 3 மாதங்களாகவே மருத்துவ விடுப்பில்தான் இருந்துள்ளார். நேற்று தனது பெரியம்மாவை ரேசன் கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.

திடீரென அவரை அங்கேயேவிட்டு விட்டு வீட்டிற்கு வந்து தற்கொலை செய்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் தேர்தலை முன்னிட்டு அவரை பணிக்கு திரும்புமாறு காவல்துறை சில நாட்களுக்கு முன்பு தகவல் கொடுத்துள்ளது.

இதன் காரணமாக அருண் பாண்டியன் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News