செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் தொடக்கம்

Published On 2021-03-12 02:32 GMT   |   Update On 2021-03-12 02:32 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க இருக்கிறது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 5-ந்தேதி வெளியிட்டது. அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 6 பேர் இடம் பெற்றிருந்தனர். நேற்று முன்தினம் 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியானது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இதற்காக, இன்று மதியம் 1.45 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் அவர் செல்கிறார்.

இன்று மாலை 5.30 மணிக்கு ஏற்காடு தொகுதி வாழப்பாடியில் அ.தி.மு.க. வேட்பாளர் கு.சித்ராவுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கெங்கவல்லி தொகுதி தம்மம்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.நல்லதம்பிக்கு ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து, ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.ஜெயசங்கரனுக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர், இரவு சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.

தொடர்ந்து, நாளையும் (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது சுற்றுப்பயணம் தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News