ஆன்மிகம்
வெள்ளிப்பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடந்ததை படத்தில் காணலாம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழா

Published On 2021-03-18 08:06 GMT   |   Update On 2021-03-18 08:06 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 8-ம் கொடை விழாவும் நடந்தது.

இதையடுத்து பரணி கொடை விழா நேற்று நடைபெற்றது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு உருள் நேர்ச்சையும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 11 மணிக்கு பருத்திவிளையில் இருந்து அம்மனுக்கு சந்தன குட பவனி வருதலும், மதியம் 1 மணிக்கு உச்ச கால பூஜையும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை தொடங்கியது.

ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த பூஜை மாசித் திருவிழாவின் 6-ம் நாள் அன்றும், மீனபரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் நடைபெறும்.

வலிய படுக்கை பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திறளி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழவகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவுப் பதார்த்தங்கள் படைக்கப்பட்டிருந்தது. அப்போது அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வலிய படுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கியது. மேலும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அங்கு உள்ள தென்னந்தோப்புகளில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
Tags:    

Similar News