ஆன்மிகம்
வரலட்சுமி நோன்பு

இன்று வறுமையை அகற்றும் வரலட்சுமி நோன்பு

Published On 2020-07-31 02:17 GMT   |   Update On 2020-07-31 02:17 GMT
வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.
மகத நாட்டில் வாழ்ந்த சாருமதி என்ற பெண், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்களாக கருதாமல், இறைவனைப்போல கருதி அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது அந்த செய்கை, மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்ததால், அன்னையானவள் சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார்.

மேலும் சாருமதிக்கு வரலட்சுமி நோன்பின் வழிமுறைகளை கூறி, அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்படி கூறினாள். மேலும் “என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்” என்றும் அருளினாள், மகாலட்சுமி. அதன்படியே செய்தாள் சாருமதி. அவள் பெற்ற நன்மைகளை கண்ட பெண்கள் பலரும், தாங்களும் மகாலட்சுமிக்காக விரதம் இருந் தனர். நாளடைவில் அந்த நாட்டு மக்கள் முழுவதும் விர தம் இருக்கத் தொடங்கினர். நாடு சுபீட்சம் அடைந்தது.

விரதம் இருக்கும் முறை

வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.

விரத பூஜைக்கு தேவை யான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும். ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப்பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.

இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்திற்கு சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சொல்லலாம்.

‘மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்’ என்று மனம் உருக வணங்க வேண் டும். பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
Tags:    

Similar News