உள்ளூர் செய்திகள்
மோட்டார்சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதி தொழிலாளி பலி
வேளச்சேரி அருகே மோட்டார்சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி:
பள்ளிக்கரணை வெள்ளைக்கல் பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் டில்லி (58). கார்பெண்டர். இவர் மோட்டார்சைக்கிளில் சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கத்துக்கு சென்று கொண்டிருந்தார். செம்மொழி சாலை வழியாக சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் கீழே விழுந்த டில்லி மீது லாரி சக்கரம் ஏறியதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
லாரி அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளுடன் லாரியை டிரைவர் ஓட்டிச்சென்றார். உடனே பொதுமக்கள் விரட்டி சென்று லாரியை மடக்கி பெரும்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் லாரி டிரைவர் பெரும்பாக்கம் முத்தமிழ் நகரை சேர்ந்த ஏழுமலை என்பதும் அவர் குடிபோதையில் லாரியை ஓட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.