செய்திகள்
கைது

சாப்பாட்டில் தலைமுடி - மனைவியை மொட்டையடித்த வாலிபர்

Published On 2019-10-09 21:32 GMT   |   Update On 2019-10-09 21:32 GMT
சாப்பாட்டில் தலைமுடி இருந்ததால் தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
டாக்கா:

வங்காளதேசத்தின் வடக்கு பகுதியில் ஜாய்புர்ஹட் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு மொண்டல் (வயது 35). 23 வயதான இவரது மனைவி நேற்று முன்தினம் காலை வழக்கம் போல உணவு தயார் செய்து கணவருக்கு கொடுத்தார். அந்த உணவில் தலைமுடி கிடந்தது.

இதனால் கடும் கோபம் அடைந்த பப்லு, கத்தியை எடுத்து தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் உடனடியாக பப்லுவை கைது செய்தனர். அவர் மீது ‘தானாக கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்’ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பிரிவின் கீழ் அவருக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் கூறினர்.

வங்காளதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும், பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதை இந்த சம்பவம் உணர்த்துவதாக சமூக செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம், அங்கு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்த 19 வயது பள்ளி மாணவி உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதும், அதனை தொடர்ந்து மாபெரும் போராட்டம் வெடித்ததும் நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News