உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை
மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியம் தற்கொலை குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 45). இவர் விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி(35) என்ற மனைவியும், சர்வேஸ்(14) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாலசுப்பிரமணியத்துக்கு முதுகு தண்டுவடத்தில் நோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
நோய் தீராத மன வேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் கயிறு மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது குடும்பத்தார் வந்து பார்த்து அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் இந்த தற்கொலை குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.