கவர்னர் மாளிகையில் மக்களின் குறைதீர்க்கும் புகார் பெட்டி- தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்
ஐதராபாத்:
தமிழகத்தை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் தெலுங்கானா கவர்னர் மாளிகையில் மக்களின் குறைகளை தீர்க்க புகார் பெட்டி அமைக்க தமிழிசை சவுந்தரராஜன் முடிவு செய்தார்.
அதன்படி பொது மக்களின் பரிந்துரைகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக கவர்னர் மாளிகையில் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழிசை சவுந்தர்ராஜன் புத்தாண்டு தினமான நேற்று தொடங்கி வைத்தார்.
நாட்டில் கவர்னரால் தொடங்கப்பட்ட இது போன்ற புகார்பெட்டி நிகழ்வு முதல்முறையானதாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘பொது மக்களின் எல்லா குறைகளும் தீர்க்கப்படும் என்று நான் கூறவில்லை. மக்களின் குறைகளை நாங்கள் அரசாங்கத்துக்கு அனுப்புவோம். மக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக கவர்னர் மாளிகை செயல்படும்’’ என்றார்.
இதைபோல கவர்னர் மாளிகை வளாகத்தில் ஊழியர்களின் வசதிக்காக வைக்கப்பட்ட மற்றொரு புகார் பெட்டியையும் அவர் திறந்து வைத்தார். கவர்னர் மாளிகை ஊழியர்கள் தங்கள் குறைகளை அந்த பெட்டியில் போடலாம். கவர்னர் மாளிகை அதிகாரிகளால் இதற்கு தீர்வு காணப்படும்.
இதையும் படியுங்கள்... பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைவிட அவரது மகன் ஐந்து மடங்கு பணக்காரர்