உள்ளூர் செய்திகள்
திருமருகல் அருகே திட்டச்சேரி பகுதியில் பொங்கலை முன்னிட்டு மண்பானை விற்பனை

அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை அரசு காப்பாற்ற வேண்டும்

Published On 2022-01-12 10:34 GMT   |   Update On 2022-01-12 10:34 GMT
அழிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்க அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

பண்டைய தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்திருந்த பொருட்களில் பிரதானமானது மண்பாண்டங்கள். மேலை நாட்டு கலாச்சாரங்கள்
மீதான பற்று காரணமாக சில ஆண்டுகளாக மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்த நிலையில் பொங்கலுக்கு மட்டும் அதன் மதிப்பு குறைவதில்லை.

இந்நிலையில் திருமருகல் பகுதிகளில் பொங்கல் பானை மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணி மிகவும் மந்தமாகவே உள்ளது.பொங்கல் பண்டிகை 
வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானை அடுப்பு, சட்டி உள்ளிட்டவைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து தயாராக வைத்திருப்பார்கள். 

அண்மையில் தொடர்ந்து பெய்த தொடர் மழை காரணமாக பொங்கல் பானை அடுப்பு செய்யும் பணி இந்த ஆண்டு கால தாமதமாகவே தொடங்கியது.

இருப்பினும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 1 நாள் மட்டும் உள்ள நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி கொந்தகை, கணபதிபுரம் திருச்செட்டாங்குடி, திருக்கண்ணபுரம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மண்பாண்டங்கள் செய்யும் பணியை செய்து வந்தனர்.

இந்நிலையில் தொடர்மழை காரணமாக பொங்கல் பானை அடுப்புகள் தயாரிப்பு பணி மிகவும் மந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில் இத்தொழிலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தொழில் ரீதியாக எந்த வித சலுகைகளும் மானியங்களும் செய்ய முன்வராததால் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த சிரமத்திற்கு இடையே தொழில் செய்து வருகின்றனர்

குறிப்பாக பொங்கல் பானை, அடுப்பு, அகல்விளக்கு செய்யும் பொழுது பருவமழை பெய்ததால் கடந்த சில ஆண்டாக மண்பாண்ட தொழில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் வேதனையை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறும் தொழிலாளர்கள் குறைந்த அளவு பொருட்களை கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்பானையில் உணவு சமைத்தால் புற ஊதாக் கதிர்கள் உணவை தாக்காமல் இருப்பதாகவும் அதன் காரணமாக உணவு சத்துள்ளதாகவும் சுவையுள்ளதாகவும் இருக்கும் என்பது வாழ்வியல் உண்மை நகரத்தில் வாழும் பலர் இன்றும் மீன் குழம்பு வைக்க மண் சட்டியை தான் விரும்பி வாங்கி செல்கின்றனர். 

மண்சட்டி, மற்றும் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் தைத் திருநாளான முதல் நாள் புது பானை புது அடுப்பு பயன்படுத்தி பொங்கல் செய்வது காலங்காலமாய் தமிழர்களிடையே இருந்து வரும் பழக்கம் இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம் என தொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அழிந்து வரும் இந்த மண்பாண்ட தொழிலுக்கு அரசு உதவி செய்து அவர்களது வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Tags:    

Similar News