உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய காரை படத்தில் காணலாம்.

பெரம்பலூர் அருகே பனி மூட்டத்தால் விபத்து- டேங்கர் லாரி மீது கார் மோதி சகோதரர்கள் கருகி பலி

Published On 2022-01-13 06:58 GMT   |   Update On 2022-01-13 06:58 GMT
பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊரான திருச்சிக்கு சென்றபோது சகோதரர்கள் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாடாலூர்:

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரர் வெங்கடவரதன் (45).

இவர்களது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் குளத்தூர் கிராமம் ஆகும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சகோதரர்கள் இருவரும் சென்னையில் இருந்து நேற்று இரவு வாடகை காரில் திருச்சிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் குமாரின் மகள் தன்யாஸ்ரீ (14) என்பவரும் உடன் வந்தார்.

காரை கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் பெரிய மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் (27) என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் திருச்சி நோக்கி வந்த கார், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை அடுத்த ஆஞ்சநேயர் கோவில் அருகே கடுமையான பனிமூட்டம் காரணமாக முன்னாள் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது.

இதில் டேங்கர் லாரி தீப்பிடித்தது. மேலும் லாரியின் அடியில் சிக்கிக் கொண்ட காரிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட சகோதரர்கள் குமார், வெங்கடவரதன் ஆகிய இருவரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் குமாரின் மகள் தன்யாஸ்ரீ, டிரைவர் விஸ்வநாதன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்தவர்கள் காருக்குள் எரிந்த நிலையில் இருந்தவர்களை மீட்டதோடு, காயம் அடைந்தவர்களை உடனடியாக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் டேங்கர் லாரியின் ஒரு பகுதி மற்றும் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊரான திருச்சிக்கு சென்றபோது சகோதரர்கள் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News