செய்திகள்
வங்க கடலில் உருவான ‘புல்புல்’ புயல் தீவிரம் அடைகிறது
வட அந்தமான் கடல் பகுதியில் உருவான ‘புல்புல்’ புயல் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தீவிர புயலாக மாறுகிறது.
- அந்தமான் கடல் பகுதியில் உருவான ‘புல்புல்‘ புயல் தீவிர புயலாக மாறுகிறது.
- புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை.
- மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும்
சென்னை:
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அரபிக்கடல் பகுதியில் உருவான புயலின் காரணமாக தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டதால் கடந்த 4 நாட்களாக மழை குறைந்து விட்டது.
இந்த நிலையில் தாய்லாந்து கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்தது.
அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயர் சூட்டினர்.
இந்த புயலினால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இப்போது தீவிர புயலாக மாறி வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-
வட அந்தமான் கடல் பகுதியில் உருவான ‘புல்புல்’ புயல் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தீவிர புயலாக மாறுகிறது. இது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை நோக்கி செல்கிறது. இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.