செய்திகள்
நகை திருட்டு

புதுவை லாஸ்பேட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-10-08 03:19 GMT   |   Update On 2019-10-08 03:19 GMT
புதுவை லாஸ்பேட்டையில் அடுத்தடுத்து வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை பாரதி நகர் 11-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் மலர்விழி (50). இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 5-ந்தேதி கண்ணனும், மலர்விழியும் வீடுகளை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

நேற்று காலை லாஸ்பேட்டை மகாவீர் நகரில் வசிக்கும் கண்ணனின் மகன் மனோகரன் தனது தந்தை மற்றும் அக்காள் மலர்விழியின் வீடுகளை பார்வையிட வந்தார்.

அப்போது 2 வீடுகளிலும் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதில், கண்ணன் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மலர்விழி வங்கி லாக்கரில் நகை-பணத்தை வைத்திருந்ததால் அவை தப்பியது.

மற்றொரு சம்பவம்....

இதுபோல் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரோடியர் மில் ஊழியர் அன்பு (63) என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார்.

மர்ம நபர்கள் இவரது வீட்டிலும் கதவை உடைத்து 2 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

வீடுகளை பூட்டி விட்டு வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

இந்த துணிகர கொள்ளை குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் வீடுகளின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News