செய்திகள்
கொலை

திருச்செந்தூர் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை

Published On 2019-11-04 12:41 GMT   |   Update On 2019-11-04 12:41 GMT
திருச்செந்தூர் அருகே தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ராணி மகாராஜபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு வேல்குமார் (வயது33), சரவணன் உள்ளிட்ட 5 மகன்கள் உள்ளனர். வேல்குமாரை தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முத்துவின் மனைவி கடந்த 22 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வேல்குமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்தார். 

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முத்து ஊர்த்தலைவராக இருந்த போது ஊர் கணக்கு வழக்கு சம்பந்தமாக அவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த தங்கவேல் மகன் கேசவன் (43) என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கேசவன், முத்துவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த வேல்குமாரின் அண்ணன் சரவணன், கேசவனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கேசவன் அளித்த புகாரில் சரவணன் கைதாகி கடந்த 2018-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுதலை பெற்றார். அதே வருடம் கேசவன், வேல்குமாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து வேல்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு வேல்குமார் ராணி மகராஜபுரத்தில் உள்ள ஒரு தெருவில் நின்று கேசவனின் மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கேசவனும், ரஸ்தா தெருவை சேர்ந்த அவரது நண்பர் முத்து செல்வம் (25) என்பவரும் வேல்குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்கள் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். 

ஆனால் இரவு 10 மணியளவில் தகராறு நடந்த பகுதிக்கு மீண்டும் கேசவனும், முத்து செல்வமும் வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வேல்குமாரை இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மார்பு, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினர். 

இதில் பலத்த காயமடைந்த வேல்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கேசவனும், முத்து செல்வமும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் அங்கிருந்தவர்கள் வேல்குமார் அண்ணன் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்து சென்ற சரவணன் தம்பி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தார். 

இதுகுறித்து சரவணன் திருச்செந்தூர் போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேல்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய கேசவன், முத்துசெல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News