பொது இடங்களில் குப்பை, கட்டிடக் கழிவுகளை கொட்டிய 630 பேருக்கு அபராதம்
சென்னை:
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பவர்கள், வாகனங்களில் இருந்து குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சாலைகளிலும் பொது இடங்களிலும், நீர் நிலைகளிலும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
கடந்த 11, 12 மற்றும் 13-ந் தேதிகளில் பொதுஇடங்களில் குப்பை கொட்டிய 507 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டது.
பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய 123 பேர்கள் மீது ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் பொது இடங்களிலும், நீர்வழித் தடங்களிலும் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கும்படி மாநகராட்சி கேட்டு கொண்டுள்ளது.